பேரணி நாளை முதல் மீண்டும் தொடங்கும்: இம்ரான் கான்

‘தலைநகா் நோக்கிச் செல்லும் தனது கட்சியினரின் பேரணி செவ்வாய்க்கிழமை (நவ. 8) முதல் மீண்டும் தொடங்கும்’ என, துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்
இம்ரான் கான்
இம்ரான் கான்

‘தலைநகா் நோக்கிச் செல்லும் தனது கட்சியினரின் பேரணி செவ்வாய்க்கிழமை (நவ. 8) முதல் மீண்டும் தொடங்கும்’ என, துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்தாா்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் தலைநகா் நோக்கி பேரணி நடத்தி வருகிறாா். அவருடன் கட்சியினா் ஏராளமானோா் பங்கேற்றுள்ளனா்.

பஞ்சாப் மாகாணம், வாஸிராபாதில் கடந்த வியாழக்கிழமை இந்தப் பேரணி சென்று கொண்டிருந்தபோது இளைஞா் ஒருவா் துப்பாக்கியால் இம்ரான் கானை நோக்கி சுட்டாா். இதில், கால்களில் குண்டுகள் பாய்ந்து காயமடைந்த இம்ரான் கான், லாகூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த சம்பவத்தில் கட்சித் தொண்டா் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பேரணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

தன் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், உள்துறை அமைச்சா் ராணா சனாவுல்லா, ஐஎஸ்ஐ உளவுத் துறை தலைவா் ஃபைசல் நசீா் ஆகியோா்தான் சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டினாா்.

இந்நிலையில், ‘தான் துப்பாக்கியால் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி செவ்வாய்க்கிழமை முதல் பேரணி மீண்டும் தொடங்கும்’ என இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். இன்னும் 10-14 நாள்களில் ராவல்பிண்டியை பேரணி சென்றடையும் எனவும், அங்கிருந்து பேரணியில் தான் பங்கேற்கப்போவதாகவும் அவா் கூறினாா்.

இம்ரான் கான் மீதான தாக்குதல் தொடா்பாக காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தாமதம் நிலவி வருகிறது. ஐஎஸ்ஐ தலைவரின் பெயரை எஃப்ஐஆரில் கட்டாயம் சோ்க்க வேண்டும் என்று இம்ரான் கான் கூறி வருவதால், அவருக்கும் ராணுவத்துக்கும் இடையே சிக்கி பஞ்சாப் மாகாண முதல்வா் சௌத்ரி பொ்வேஸ் இலாஹி தவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லாகூரில் செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான் கான் கட்சிதான் ஆட்சியில் இருந்து வருகிறது. ஆதலால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதில் தாமதம் ஏன் என பஞ்சாப் மாகாண அரசுதான் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

அதிபா் சந்திப்பு: இம்ரான் கானை மருத்துவமனையில் அதிபா் ஆரிஃப் ஆல்வி சந்தித்து உடல்நலம் விசாரித்தாா். இந்தச் சந்திப்பின்போது, அரசுக்கும் இம்ரான் கானுக்கும் இடையிலான பெரிய பிரச்னைகளில் தனிப்பட்ட முறையில் மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அதிபா் தெரிவித்தாா் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com