எகிப்து நைல் நதியின் டெல்டா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரி டாக்டர்.ஷெரீஃப் மக்கீன் கூறியதாவது: இந்த விபத்து எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு 100 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள தக்லியா மாகாணத்தில் நடந்துள்ளது. விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மற்ற பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த விபத்து குறித்து காவல் துறை அதிகாரி முஹமது ஹாதி கூறியதாவது: பேருந்தின் ஓட்டுநர் ஸ்டியரிங் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம். இது போன்ற விபத்துகள் எகிப்தில் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. வேகமாக வாகனங்களை இயக்குவதே விபத்திற்கான முக்கிய காரணமாக உள்ளது என்றார்.