இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி 271-ஆக உயர்வு
இந்தோனேசியாவில் நவ.21-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 271-ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூா் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் அந்தப் பகுதியிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள் நான்காவது நாளாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேடுதலை விரைவுபடுத்த 1000-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மோப்ப நாய்கள் மற்றும் லைப் டிடெக்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
படிக்க: ’லவ் டுடே’ இதுவரை வசூல் எவ்வளவு?
மேலும், குகெனாங் துணை மாவட்டத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களின் மண் மற்றும் இடிபாடுகளில் 40 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இடிபாடுகளில் குறைந்தது 56,000 வீடுகள் சேதமடைந்துள்ளது. குறைந்தது 61,000 பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 100 குழந்தைகள் உள்பட 271 பேர் உயிரிழந்ததாகத் தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் தலைவா் சுஹாா்யான்டோ தகவல் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் கனமழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள் புதன்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.