ஜப்பான் மீது வட கொரியா ஏவுகணை வீசியதால் ஜப்பான் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகிறது.
ஜப்பான் கடற்பகுதியில் மீது கடந்த அக். 1 ஆம் தேதி(சனிக்கிழமை) 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று காலை மீண்டும் ஜப்பான் மீது ஏவுகணை வீசியுள்ளது வடகொரியா. இது இது பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் 1,000 கிலோமீட்டர் உயரத்தில் 20 நிமிடங்கள் பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஏவுகணை பறந்த நேரத்தில் வடக்கு ஜப்பானில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
ஜப்பான் நாட்டின் வான்வெளியில் பறந்த வடகொரிய ஏவுகணையால் பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட கொரியா ஒரே வாரத்தில் ஐந்தாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!