பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடல் போல காட்சியளிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் செரீஃப் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசியுள்ளார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகத் தலைவர்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் செரீஃப் பேசியதாவது: “ பருவநிலை மாற்றம் பாகிஸ்தானை வெள்ளத்தில் மூழ்கச் செய்துள்ளது. இதுவரை வெள்ளத்தால் 1500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும். இந்த வெள்ளத்தால் 3.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 14 முதல் பெய்து வரும் கனமழை பாகிஸ்தானின் பல பகுதிகளை மூழ்கடித்துள்ளது. இந்த வெள்ளமானது பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகும். பருவநிலை மாற்றம், மேக வெடிப்பு மற்றும் அதிக அளவிலான பருவ மழையின் காரணத்தினால் பாகிஸ்தான் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. உலகத் தலைவர்கள் பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.” என்றார்.
இதையும் படிக்க: மக்களுக்காக உழைக்கும்போது சோர்வாக உணராதீர்கள்: நவீன் பட்நாயக்
8 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கிய போது சீனா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளும் உறுப்பு நாடுகளாக இருந்துள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்த அமைப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறுப்பினர்களாக இணைந்தது குறிப்பிடத்தக்கது.