இலங்கைப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கத் தற்போது அரசியல் குழப்பமும் மேலோங்கத் தொடங்கியுள்ளது.
தலைநகரில் அடுத்தடுத்த ராஜிநாமாக்களுடன் தற்போது கருவூலத் துறைச் செயலரின் விலகலும் இணைந்துள்ளது.
தன்னுடைய சகோதரர் பசில் ராஜபட்சவிடமிருந்து நிதித் துறை அமைச்சர் பதவியைப் பறித்த அதிபர் கோத்தபய ராஜபட்ச, நிதித்துறை அமைச்சராக நீதித் துறையைக் கவனித்துவந்த அலி சாப்ரியை நியமித்தார்.
ஆனால், 24 மணி நேரத்துக்குள் அலி சாப்ரியும் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டார்.
இதனிடையே, கருவூலத் துறைச் செயலராக இருந்த எஸ்.ஆர். அட்டிகலவும் தன்னுடைய ராஜிநாமாக் கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு அனுப்பியுள்ளார்.
நிதித் துறை அமைச்சர் பதவியும் காலியாக இருக்கும் நிலையில் அட்டிகலவும் ராஜிநாமா செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.