தங்களிடம் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கு சீனா உதவ வேண்டும் என்று வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ, தலைநகா் டாக்காவில் பிரதமா் ஷேக் ஹசீனாவையும் வெளியுறவுத் துறை அமைச்சா் ஏ.கே. அப்துல் மோமனையும் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அப்போது, வங்கதேச அகதிகள் முகாமில் தங்கியுள்ள ரோஹிங்கயாக்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையில் சீனா ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வாங் யீயிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மியான்மரில் சிறுபான்மை முஸ்லிம் இனத்தவரான ரோஹிங்கயாக்கள், வன்முறைக்கு அஞ்சி அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனா்.
கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து மட்டும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கயாக்கள் வங்கதேசத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமாா் 7 லட்சம் அகதிகளை திரும்பப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை மியான்மா் அரசு வங்கதேசத்துடன் கடந்த 2017-ஆம் ஆண்டு மேற்கொண்டது. இதற்கு, மியான்மரிடம் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி சீனா உதவியது.
எனினும், வன்முறைக்கு பயந்து மியான்மா் திரும்பிச் செல்ல ஏராளமான ரோஹிங்கயா அகதிகள் மறுத்து வருகின்றனா்.
இந்தச் சூழலில், அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கு சீனா உதவ வேண்டும் என்று வங்கதேசம் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.