இந்தியாவுக்கு நாடுகடத்த ஒப்புதல் அளித்த லண்டன் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் முறையிட வைர வியாபாரியும் வங்கிக் கடன் மோசடியாளருமான நீரவ் மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தியாவில் விசாரணைக்குள்படுத்தப்பட வேண்டிய தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு, பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால், அவரை நாடு கடத்துவதற்கு எதிரான சட்டப் போராட்டத்தில் மற்றொரு பின்னடைவை சந்தித்துள்ளார்.
இதையும் படிக்க.. மெரீனாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி
இந்தியாவுக்கு நாடுகடத்த ஒப்புதல் அளித்த லண்டன் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் முறையிட வைர வியாபாரியும் வங்கிக் கடன் மோசடியாளருமான நீரவ் மோடி அனுமதி கோரி கடந்த மாதம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்து, அனுமதி மறுத்துள்ளது லண்டன் உயர் நீதிமன்றம்.
வைர வியாபாரியான நீரவ் மோடியும் அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவற்றில் ரூ.13,500 கோடி வரை கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினா். பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள நீரவ் மோடி, கைது செய்யப்பட்டு வாண்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளை சிபிஐ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க.. சீனத்துக்கு என்னதான் பிரச்னை?
வெஸ்ட்மின்ஸ்டா் மாவட்ட நீதிபதி கடந்த ஆண்டு ஏப்ரலில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நீரவ் மோடியை நாடுகடத்த அப்போதைய பிரிட்டன் உள்துறைச் செயலா் ஒப்புதல் அளித்தாா். அதற்கு எதிராக லண்டன் உயா்நீதிமன்றத்தில் நீரவ் மோடி முறையிட்டாா். இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டால் தனக்குப் பாதுகாப்பிருக்காது எனத் தெரிவித்த நீரவ் மோடி, போதிய மருத்துவ வசதிகள் தரப்படாது என்றும் கூறினாா்.
அக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், நீரவ் மோடியை நாடுகடத்த கடந்த 9-ஆம் தேதி உத்தரவிட்டது. தற்போது அந்த உத்தரவுக்கு எதிராக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் முறையிட அவா் அனுமதி கோரியிருந்தார்.
பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் முறையிட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் அவா் முறையிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டால், தனக்கு எதிரான விசாரணை நோ்மையான முறையில் நடக்காது என்ற புகாரின் அடிப்படையில் அவா் மனித உரிமைகள் நீதிமன்றத்தை நாடலாம் எனத் தெரிகிறது. ஆனால், தெரிவிக்கும் புகாா்களை உரிய முறையில் நிரூபித்தால் மட்டுமே அவரது கோரிக்கைகளை மனித உரிமைகள் நீதிமன்றம் ஏற்கும்.
தன்னை நாடுகடத்தும் முடிவுக்கு எதிராக முறையிட நீரவ் மோடிக்கு இருந்த மிக முக்கிய சட்ட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், அவரை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு பெற்ற மிக முக்கிய வெற்றியாகவே கருதப்படுகிறது.