
தவறான அமைச்சரிடம் கேட்கிறீர்கள்: சுருக்கென்று பதிலளித்த எஸ். ஜெய்சங்கர்
புது தில்லி: இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் புது தில்லி, காபூல், பாகிஸ்தானில் இருந்துகொண்டு பயங்கரவாதத்தை தெற்காசியா பார்க்கப்போகிறது என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு நீங்கள் தவறான அமைச்சரிடம் கேட்கிறீர்கள் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சுருக்கென்று பதிலளித்துள்ளார்.
நீங்கள் தவறான அமைச்சரிடம் கேள்வி கேட்கிறீர்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூக்கிப் பிடிக்கப் போகிறது என்பதை பாகிஸ்தான் அமைச்சர்தான் சொல்லுவார் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற போது, பாகிஸ்தான் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மிகக் காட்டமாகப் பதிலளித்தார்.
இதையும் படிக்க.. ''தோற்றால் பரவாயில்லை''.. மனைவியிடம் ரூ.10,000 கடன் வாங்கித் தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ்
தொடர்ந்து அவர் பேசுகையில், இறுதியாக உலகம் ஒன்றும் முட்டாள் இல்லை, இந்த உலகம் எதையும் மறந்துவிடவில்லை, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் நாடுகளை இந்த உலகம் அறிந்தே இருக்கிறது.
எனது ஒரே அறிவுரை இதுதான், உங்கள் நடிப்பை தூக்கியெறியுங்கள். தயவு கூர்ந்து நல்ல அண்டைநாடாக இருக்க முயலுங்கள். இன்று உலகின் மற்ற நாடுகள் பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம்,மேம்பாடு போன்றவற்றுக்காக முயற்சித்து வருவது போல நீங்களும் முயலுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெய்சங்கர்.
இதையும் படிக்க.. 'நக்கலாக சிரித்த பயங்கரவாதி கசாப்': மும்பை தாக்குதலில் உயிர் தப்பியவரின் அனுபவம்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், பயங்கரவாத எதிா்ப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தங்கள் தொடா்பான இரு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவதற்காக, நியூயாா்க் நகருக்கு எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சென்றிருந்தார்.
15 நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைமை பொறுப்பை தற்போது இந்தியா வகித்து வருகிறது. இக்கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக உள்ள இந்தியாவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடையவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.