பெண்களின் உரிமையைப் பறிக்கும் தலிபான்கள்: கண்டனம் தெரிவிக்கும் இஸ்லாமிய நாடுகள்

பல்கலைக் கழகங்களில் பயில பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆப்கானிஸ்தான் பெண்கள் காபூலில் போராடி வரும்நிலையில், துருக்கி மற்றும் சவுதி அரேபியா தலிபான்களின் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பெண்களின் உரிமையைப் பறிக்கும் தலிபான்கள்: கண்டனம் தெரிவிக்கும் இஸ்லாமிய நாடுகள்
Published on
Updated on
2 min read

பல்கலைக் கழகங்களில் பயில பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆப்கானிஸ்தான் பெண்கள் காபூலில் போராடி வரும்நிலையில், முஸ்லிம்கள் அதிகம் உள்ள நாடுகளான துருக்கி மற்றும் சவூதி அரேபியா தலிபான்களின் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்த வாரத்தின் தொடக்கத்தில் தலிபான்கள் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அதில், ஆப்கானிஸ்தான் பெண்கள் அரசு மற்றும் தனியாருக்குச் செந்தமான பல்கலைக் கழகங்களுக்கு செல்லக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து தலிபான்கள் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. 

இந்தப் புதிய உத்தரவுக்கு எதிராகப் பலரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானின் ஆளும் அரசிடமிருந்து ஆட்சியை தங்கள் வசம் கொண்டு வந்தனர். இருப்பினும், மக்களது உரிமைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என தலிபான்கள் உறுதியளித்தனர். ஆனால், அதனை அவர்கள் இதுவரை கடைபிடிக்கவே இல்லை. பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என அவர்கள் கூறியிருந்தனர். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பெண்களின் உரிமைகளை ஒன்றன் பின் ஒன்றாக பறித்துக் கொண்டே வந்தனர்.

முதலில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்தனர். பின்னர் பெண்கள் வேலைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் விரல் வரை மறைத்திருக்கும் வண்ணம் உடையணிய அறிவுறுத்தப்பட்டார்கள். அதேபோல பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்குச் செல்லவும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தலிபான்கள் பெண்களின் கல்வி மற்றும் உரிமைகளை மதிக்காமல் அவர்களுக்கு எதிராக தடைகளை விதித்து வருகின்றனர்.

அண்மையில், பெண்கள் பல்கலைக் கழகங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு எதிராக பெண்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான துருக்கி மற்றும் சவுதி அரேபியா தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லட் கௌசோகுலு கூறியதாவது: இந்தத் தடையில் இஸ்லாமியமும் இல்லை, மனிதத்தன்மையும் இல்லை. தலிபான்கள் அவர்களது இந்தத் தடையைத் திரும்பப் பெற வேண்டும். பெண்கள் கல்வி கற்பதில் அவர்களுக்கு என்ன பிரச்னை? அதனால் ஆப்கானிஸ்தானுக்கு என்ன தீங்கு விளையப் போகிறது? இஸ்லாம் ஒருபோதும் கல்விக்கு எதிரானது அல்ல. இஸ்லாம் கல்வியையும், அறிவியலையும் ஊக்குவிப்பதாகும் என்றார்.

2019 ஆண்டுக்கு முன்பு வரை பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்த சவூதி அரேபியாவும் தலிபான்களின் நடவடிக்கைக்கு எதிரான தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து சவூதி அரேபியா தரப்பில் கூறியதாவது: தலிபான்களின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தலிபான்களுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முன்னதாக, கத்தார் தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com