உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில், பதற்றம் நிலவிவருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்நிலையில், உலகளாவிய எரிசக்தி சந்தையை உன்னிப்பாக கண்காணித்துவருவதாகவும் எண்ணெய் விலையின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சூழ்நிலையின் வீழ்ச்சியாக, உலகளாவிய எரிசக்தி சந்தைகள் மற்றும் அதன் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க இந்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
மக்களுக்கு எரிசக்தி நீதியை உறுதிசெய்யும் நோக்கத்திற்காகவும் பசுமை இல்ல வாயுக்கள் இல்லா எதிர்காலத்தை நோக்கிய எரிசக்தி மாற்றத்திற்காகவும், நிலையான விலையில் தற்போதைய விநியோகத்தை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க இந்தியா தயாராக உள்ளது.
சந்தை ஏற்ற இறக்கத்தைத் தணிக்கவும், கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தவும், இருப்புக்களில் இருந்து எண்ணெயை விடுவிக்கவும் அரசு தயாராக உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 113 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ள நிலையில், மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், உக்ரைன் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள புவிஅரசியல் மாற்றத்தின் காரணமாக எரிபொருள் விலை உயர்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அரசியல் ரீதியாகவும், ஐந்து மாநில தேர்தல் நிறைவடையவுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.