ஜெனீவா: ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.
ஜெனீவாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று குறைந்த அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் தீவிரம் குறைந்த தொற்றாக இருந்தாலும், உலகம் முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிப்படுதல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து இருந்து வருவதால் இதனை லேசான தொற்று பரவலாக எடுத்துக்கொள்ளக் கூடாது. குறைந்த அளவிலான பாதிப்புகள் கூட சுகாதார வசதிகளை மூழ்கடித்துவிடுகின்றன.
மேலும் அடுத்த சில வாரங்கள் சுகாதார அமைப்புகளுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவுக்கு தொற்றின் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இதையும் படிக்க | உலகளவில் கரோனா பாதிப்பு 33.94 கோடி; பலி 5.58 லட்சத்தை கடந்தது
கரோனா தொற்றின் ஒவ்வொரு மாறுபாடும் ஆபத்தானதுதான். கரோனா தொற்று அச்சுறுத்தல் தற்போதைக்கு முடிவுக்கு வராது. ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்புள்ளதாகவும், எனவே தடுப்பூசி போடாதவர்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். குறைந்த தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட நாடுகளைப் பற்றி நான் கவலைப்படுகிறேன், தடுப்பூசி போடாதவர்கள் கடுமையான நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகம் என்று டெட்ரோஸ் அதானோம் கூறினார்.