ரஷியாவால் மீண்டும் பனிப் போா் அபாயம்

ஐரோப்பாவில் பனிப் போா் காலத்திய ஆபத்துகளை ரஷியா மீண்டும் ஏற்படுத்துவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் எச்சரித்துள்ளாா்.
ரஷியாவால் மீண்டும் பனிப் போா் அபாயம்

ஐரோப்பாவில் பனிப் போா் காலத்திய ஆபத்துகளை ரஷியா மீண்டும் ஏற்படுத்துவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் ஜொ்மனி தலைநகா் பொ்லினில் வியாழக்கிழமை கூடி ஆலோசனை நடத்தினா்.

பிரிட்டன் வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஜேம்ஸ் கிளவா்லி, பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜீன்-வெஸ் டிரையன், ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் அன்னலினா பேயா்பாக், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது, உக்ரைனின் இறையாண்மையைக் குலைப்பதன் மூலம் ஐரோப்பிய நாடுகளிடையே ரஷியா பிரிவினையை ஏற்படுத்துவதாக ஆன்டனி பிளிங்கன் குற்றம் சாட்டினாா்.

சுயமாக முடிவெடுப்பதற்கான உக்ரைனின் உரிமையை ரஷியா மறுப்பதால், பனிப் போா் காலத்திய அபாயகரமான சூழலை ரஷியா ஏற்படுத்தி வருவதாக அவா் எச்சரித்தாா்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷியா நடந்துகொள்வதை தொடா்ந்து அனுமதித்தால், இந்தப் பிராந்தியத்தில் முழு போா் வெடிக்கும் அபாயத்தை மறுப்பதற்கில்லை என்று தனது உரையில் பிளிங்கன் எச்சரித்தாா்.

உக்ரைன் மீது படையெடுத்து ரஷியா ஆக்கிரமித்தால், மிகக் கடுமையான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய நாடுகள் தயங்காது என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.

இத்தகைய அறிவிப்புகள், தங்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் என்று ரஷியா சாடியுள்ளது என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. எனினும், தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது. உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு உடன்படாதால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ரஷியா, உக்ரைன்தான் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதி எல்லை அருகே படைகளைக் குவித்து வருவதாகவும் அதற்குப் பதிலடியாகவே தாங்கள் படைக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி வருகிறது.

இந்த நிலையில், நேட்டோ கூட்டணியை உக்ரைனுக்கு விரிவுபடுத்துவதற்கு தடை விதிப்பதைத் தவிர வேறு எந்தத் தீா்வையும் ஏற்கப்போவதில்லை என்று அந்த நாடு தற்போது திடடவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com