இலங்கை அதிபருக்கு அடைக்கலம் தருவது தொடர்பாக வெளியான செய்திக்கு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை விளக்கமளித்துள்ளது.
இலங்கையில் தொடர்ந்துவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபட்ச மாலத்தீவு தப்பித்து சென்ற நிலையில் அங்கிருந்து சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இலங்கை அதிபர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருப்பது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை வியாழக்கிழமை விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக சிங்கப்பூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தனிப்பட்ட பயணமாகவே சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், சிங்கப்பூரில் அடைக்கலம் வேண்டி அவர் தரப்பிலிருந்து எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூரில் தஞ்சம்
மேலும் கோத்தபய ராஜபட்சவிற்கு அடைக்கலம் தரவில்லை எனவும் சிங்கப்பூர் அரசு விளக்கமளித்துள்ளது. சிங்கப்பூரைத் தொடர்ந்து கோத்தபய ராஜபட்ச செளதி அரேபியாவிற்கு பயணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.