அடுத்தவாரம் எகிப்தில் நடைபெற உள்ள ஐநா பருவநிலை மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்ற பாதிப்புகள் சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்து வருகின்றன. இதனால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க மாற்று எரிசக்தி மூலங்களுக்கு மாற உலக நாடுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இவற்றுக்கு மத்தியில் காலநிலை மாற்ற நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக எகிப்து நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஐநாவின் காலநிலை மாற்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த மாநாட்டில் கலந்து கொள்வதை ரிஷி சுனக் தவிர்க்கக்கூடும் என செய்திகள் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | சர்தார் வெற்றி: இயக்குநர் மித்ரனுக்கு காரைப் பரிசளித்த தயாரிப்பாளர்
இதுதொடர்பாக ரிஷி சுனக் தனது சுட்டுரைப் பக்கத்தில், “காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நீண்டகால இலக்குகளை அடைய முடியாது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு முதலீடுகளை ஏற்படுத்தாமல் ஆற்றல் பாதுகாப்பை அடைய முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.