போலந்து நாட்டின் மீது ரஷிய ஏவுகணை விழுந்ததில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் கடந்த 9 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் மீது தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகின்றது.
கெர்சன் நகரிலிருந்து ரஷியப் படைகள் சமீபத்தில் பின்வாங்கிய நிலையில், நேற்று உக்ரைன் மீது ரஷியப் படைகள் குண்டு மழை பொழிந்தது.
இதில், தவறுதலாக நேட்டோ கூட்டமைப்பில் உள்ள போலந்து நாட்டின் கிழக்கு பகுதியான பெர்ஸ்வுடோவில் ரஷியாவின் இரண்டு ஏவுகணைகள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், போலாந்து நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை போலந்து வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி செய்துள்ள நிலையில், ரஷிய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், போலந்து அதிபரை தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட நேட்டோ நாடுகளின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போலந்து நாட்டின் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எல்லைகளில் வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.