இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா நாட்டின் மேற்கு சாவகம் (ஜாவா) மாகாணம், சியாஞ்சூா் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது.
பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் அந்தப் பகுதியிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
நிலநடுக்கத்துக்கு 162 போ் பலியாகியுள்ளதாக மேற்கு சாவக ஆளுநா் ரித்வன் கமீல் நேற்று கூறியிருந்தார். மேலும் சியாஞ்சூா் பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகள் இடையே சிக்கியுள்ள பலரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் பலி எணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தோனேசியாவில் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், காணாமல் போன 32 பேரைத் தேடி வருவதாகவும் இதில் 377 பேர் காயமடைந்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 162 போ் பலி