இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
நிகழ்வாண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. முதல் நாளான நேற்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வந்த பேபூக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர் மற்றும் ஆஸ்திரியாவின் ஷிலிங்கர் ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நாளை வேதியியலுக்கான நோபல் பரிசும் அதைத் தொடர்ந்து பிற துறைகளுக்கான நோபல் பரிசு அடுத்தடுத்த நாள்களில் அறிவிக்கப்படவுள்ளன.