தைவான் நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லையென தைவான் அதிபர் சாய் இங் - வென் தெரிவித்துள்ளார்.
சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.
தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா். தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்தத் தலைவா் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.
தைவானை தங்களுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, தேவைப்பட்டால் அந்தத் தீவின் மீது போா்த் தொடுக்கவும் தயங்கப்போவதில்லை என்று சீனா மீண்டும் உறுதிப்படுத்திய நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருவது குறிப்பிட்டத்தக்கதே.
இன்று (அக்.10) தைவானில் தேசிய நாள் கொண்டாடப்படுகிறது. இது ‘டபுள் டென்த் டே’ , ‘டபுள் டென் டே’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய நாளன்று தைவான் அதிபர் சாய் இங் - வென் பேசியதாவது:
நமது நாட்டின் இறையாண்மை, சுதந்திரம், சமத்துவமான வாழ்கையை பாதுகாப்பதே தைவான் மக்களின் ஒருமித்த கருத்தாகும். இந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த விவகாரத்துக்கு போரின் மூலம் தீர்வு காண்பது சரியாகாதென சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினேன். தைவான் மக்களின் இறையாண்மை சுதந்திரத்தை மதித்தால் மட்டுமே சீனாவுடனான உறவு தொடரும்.