லெபனானிலிருந்து வந்த படகு, சிரியா அருகே கடலில் மூழ்கியதில், 73 அகதிகள் பலியானதாக சிரியாவின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியிருக்கிறது. இதற்காக, படகு கவிழ்ந்ததில் பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் லெபனானிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
பஞ்சம் வாட்டி வரும் லெபனானிலிருந்து ஏராளமான மக்கள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குத்தப்பிச் செல்ல முயன்று வருகிறார்கள். லெபனானின் பொருளாதார வீழ்ச்சியால் அந்நாட்டு பண மதிப்பு 90 சதவீதம் சரிவடைந்து, லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கு வறுமையில் வாடி வருகிறது.
இந்தப் படகில் வந்த 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை முதல் தேடுதல் பணி தொடங்கி தீவிரப்படுத்தப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.