கொலைகார செவிலியரின் அதிர்ச்சி தரும் பின்னணி: வெளிவராத ஒரேயொரு உண்மை

7 சிசுக்களைக் கொன்ற செவிலியருக்கு முழு ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், குற்றவாளி பற்றிய பல அதிர்ச்சி தரும் பின்னணி வெளியாகியிருக்கிறது.
கொலைகார செவிலியரின் அதிர்ச்சி தரும் பின்னணி: வெளிவராத ஒரேயொரு உண்மை

பிரிட்டனில், மகப்பேறு மருத்துவமனையில் 7 சிசுக்களைக் கொன்ற செவிலியருக்கு முழு ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், குற்றவாளி பற்றிய பல அதிர்ச்சி தரும் பின்னணி வெளியாகியிருக்கிறது.

பிரிட்டனில் மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் லூசி லெட்பி மீது 7 சிசுக்களை கொன்றதாகவும், 6 சிசுக்களை கொலை செய்ய முயன்றதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கடந்த வாரம் உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது. இதன் மூலம், லூசி லெட்பி என்ற அந்த 33 வயது பெண் அந்த நாட்டின் மிக குரூரமான தொடா் சிசு கொலையாளி என்ற பெயரைப் பெற்றார். இந்தநிலையில், இன்று அவருக்கு தண்டனை விவரத்தை வெளியிட்ட நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்த நிலையில், குற்றவாளி லெட்பி பற்றி பல அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தன்னை அனைவரையும் போல சாதாரணமானவர் என காட்டிக் கொள்ள, விடுமுறை நாள்களில் வெளியில் சென்று ஊர் சுற்றுவது, குடும்பத்துடன் செலவிடுவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். மிகப்பெரிய விற்பனையாளரின் மகளாகப் பிறந்தவர். 2011ஆம் ஆண்டு இவர் பட்டப்படிப்பை முடித்ததை, அவரது பெற்றோர் உள்ளூர் பேப்பரில் விளம்பரம் செய்து மகிழ்ந்துள்ளனர்.

வேலைக்கான நேர்காணலின்போது கூட, குழந்தைகளை மிக அழகாக வளர்த்தெடுக்கும் சிறந்த வேலையை செய்வதை நினைத்து பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுவதற்கான கூடுதல் பயிற்சிகளையும் லெட்பி பெற்றுள்ளார்.

இவ்வளவையும் செய்த லெட்பி, தன்னுடன் பணியாற்றுபவர்களையே, பல சிசுக்களின் மரணங்களின் போது, இது தங்களால்தான் நேர்ந்ததோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு நடந்துகொண்டுள்ளார். பெற்றோரிடம் நல்ல முறையில்  பேசி அதிக நம்பிக்கையை பெற்றுவிடுவாராம்.

கைதான பின்பும் கூட, மிக அமைதியாக, விசாரணைக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். ஆனால், நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மட்டுமே, அவரது மற்றொரு கோர மூகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

அதாவது, இரட்டை ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஊசியில் காற்றை நிரப்பி அதனை உடலுக்குள் செலுத்தி குழந்தையைக் கொன்றிருக்கிறார். இரண்டாவது குழந்தையை, அடுத்த நாளே, இன்சுலினை செலுத்திக் கொன்றிருக்கிறார். எந்தக் குழந்தையின் உடல் கூறாய்விலும் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. 

மருத்துவமனையில், மருந்து, மாத்திரைகளைக் கொண்ட இரண்டு பைகள் குளிர்பதனப் பெட்டியில் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். ஒன்று கெட்டுப்போன மாத்திரைகள் இருந்தது. அது லெட்பி இரவு நேரப் பணியில் இருந்த  போது அவரால் பயன்படுத்தப்படுவது, மற்றொன்று அவர் பணியில் இல்லாதபோது மற்றவர்கள் பயன்படுத்த மாற்றி வைத்துவிட்டுப் போவது.

இதனால்தான் இது திட்டமிட்ட கொலை என்று நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

குற்றவாளி லூசி லெட்பி, இந்த மருத்துவமனையைத் தவிர வேறு மருத்துவமனைகளில் செவிலியராகப் பணியாற்றும் போது ஏதேனும் கொலை செய்திருக்கிறாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை உறுதி அளித்துள்ளது.

வடமேற்கு இங்கிலாந்திலுள்ள கவுன்டஸ் செஸ்டா் மருத்துவமனையில் கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் லூசி லெட்பி பணியாற்றினாா்.

அந்த காலகட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறுப் பிரிவில் சிசிக்கள் உயிரிழப்பது, திடீா் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்து வந்தன.

இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக மருத்துவமனை நிா்வாகம் கூறுகிறது.

மருத்துவமனையில் சிசு மரணங்கள் திடீரென அதிகரித்தது தொடா்பாக போலீஸாா் கடந்த 2017-ஆம் ஆண்டில் விசாரணையைத் தொடங்கினா். அந்த விசாரணையின்போது, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவக் குறிப்பேடுகளை லூசி லெட்பியின் இல்லத்திலிருந்து பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றில் ‘நான் ஒரு பாவி’, ‘இதற்கு நான்தான் காரணம்’ என்பது போன்ற வாசகங்களை அவா் எழுதியிருப்பதைக் கண்டனா்.

அதையடுத்து, லூசி லெட்பி கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பான நடைபெற்று வந்த வழக்கின் இறுதித் தீா்ப்பை தற்போது வெளியிட்டுள்ள நீதிபதிகள், லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் 7 சிசுக்களைக் கொன்றது, 6 சிசுக்களைக் கொல்ல முயன்றது ஆகியவை மட்டும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

செவிலியர் லூசி லெட்பி மீது முதல் முறையாக சந்தேகத்தை எழுப்பியது இந்திய மருத்துவர் ரவி ஜெயராம். செவிலியர் குறித்து ரவி ஜெயராம் கூறுகையில், எனக்கு இதைச் சொல்லவே தர்மசங்கடமாக உள்ளது. சிசுக்களின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையும் போது, செவிலியர் லூசி லெட்பி, எதையும் செய்யாமல், குழந்தைகளை சாகவிட்டார். என்னால் இதனை உறுதியாகச் சொல்ல முடியும். அப்போது அந்த சிசுக்களைக் காப்பாற்றியிருந்தால் அவை தற்போது பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும். ஆனால் அந்த சிசுக்கள் இப்போது இல்லை என்று குறிப்பிட்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

2015ஆம் ஆண்டு திடீரென அதிகமான சிசுக்கள் மரணமடைந்தபோது, மருத்துவர்கள் அவசரக் கூட்டங்களை நடத்தி ஆலோசித்தோம். அப்போது, மருத்துவமனை நிர்வாகத்திடம் லெட்பி பற்றி தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பிறகு நாங்கள் காவல்துறையிடமும் பேசினோம். அப்போதுதான் அவர்களுக்கு லெட்பி மீது சந்தேகம் ஏற்பட்டது என்றார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், லெட்பிக்கு எதிராக பல ஆதாரங்கள் திரட்டப்பட்டன. அதில், லெட்பி, சிசுக்களின் நரம்புகளில், வெறும் காற்றை நிரப்பி ஊசியை செலுத்துவது, இன்சுலின் செலுத்துவது, இரைப்பைக் குடலுக்குள் காற்றை செலுத்துவது, அளவுக்கு அதிகமாக பாலைக் குடிக்க வைப்பது அல்லது ஏதேனும் திரவங்களைக் குடிக்க வைப்பது போன்றவற்றை செய்திருப்பது நிரூபிக்கப்பட்டது. ஆனால், அவர் குழந்தைகளைக் கொல்லும் போது அவை இயற்கையாக இறந்தது போல உடன் இருப்பவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளதும் விசாரணையில் ஆதாரங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை லெட்பி மறுத்து வந்தார். அவா் தரப்பில் வாதாடிய வழக்குரைஞா், லூசி லெட்பி ஒரு அப்பாவி என்றும், தாழ்வு மனப்பான்மை கொண்ட அவா் சிசுக்கள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணா்ச்சியில் அந்தக் குறிப்புகளை தனக்குத் தானாக எழுதியிருந்ததாகவும் கூறினாா்.

எனினும், அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனா்.

நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, கொலைகார செவிலியர் லெட்பி, குழந்தைகளின் நலனுக்கு எது நல்லதோ அதையே தான் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமா, ஒரு நபராக, அவர் மீது எந்தக் குறையையும் நேரடியாகக் கண்டறியமுடியவில்லை. ஆனால், அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் அவ்வாறு இருக்கவில்லை.

இதையெல்லாம் தாண்டி, லூசி லெட்பி, ஏன் இவ்வாறு செய்தார், இந்தக் குற்றங்களுக்கான பின்னணி என்ன என்பது மட்டும் விசாரணை முடிந்த பிறகும் தெரியவரவில்லை. காவல்துறையினர் இது பற்றி கூறுகையில், இதற்கு ஒரே ஒருவர்தான் பதிலளிக்க முடியம். அது லெட்பி என்கிறார்கள்.

அவா் மீது கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, லூசி லெட்பிக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com