துபை : இந்திய பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்வு! ஆய்வில் தகவல்
துபையில் செயல்பட்டு வரும் இந்திய தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.


துபை : துபையில் உள்ள இந்திய தனியார் பள்ளிகளில், கடந்த ஒரே வருடத்தில், புதிதாக 9,000 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக, துபையில் உள்ள இந்திய பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட, அமீரக தனியார் கல்விக் கட்டுப்பாட்டுனரகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தம் 215 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், இங்குள்ள பள்ளிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில், துபையில் உள்ள இந்திய தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த கல்வியாண்டில் 85,588 ஆக இருந்த நிலையில், 2022-23 ஆண்டில், 94,499 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, துபையில் அனைத்துத் தரப்பு தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை, கடந்த ஒரே வருடத்தில், 39,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து துபையில் உள்ள ’தில்லி தனியார் பள்ளியின்’ தலைமையாசிரியை ராஷ்மி நந்தகியோல்யார் கூறுகையில், “கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், இந்திய தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை திடீரென அதிகரித்ததை காண முடிந்ததாகவும், இந்த பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டதன் காரணமாக, புதிதாக நிறைய மாணவர்களை சேர்க்க முடிந்ததாகவும்” அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “மிகவும் பாதுகாப்பான பகுதியாக துபை இருப்பதால், நிறைய மக்கள் துபைக்கு குடியேறி வருவதாகவும், இந்தநிலையில், துபையில் உள்ள இந்திய பள்ளிகளில், நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் கட்டணம் வசூலிப்பதால், பெரும்பாலானோர் இந்திய தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புவதாகவும்” அவர் தெரிவித்தார்.
அரசு தரப்பு அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, அமீரகம் முழுவதும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, 3 லட்சத்து 26 ஆயிரமாக இருந்த நிலையில், கடந்த ஓராண்டில் இது 3 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வித் துறையால் இந்திய தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் தர நிர்ணய அங்கீகாரமும் மேம்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் உள்ள பள்ளிகளில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட பல்வேறு கல்வி முறைகள் இருப்பதைப் போல, அமீரகத்தில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் மொத்தம் 18 விதமான கல்வி முறைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், துபையில் உள்ள பள்ளிகளில், பிரிட்டன் கல்வி முறையைப் பின்பற்றும் பள்ளிகளில் 35 சதவிகித மாணவர்களும், இந்திய கல்வி முறைப் பள்ளிகளில் 26 சதவிகித மாணவர்களும், அமெரிக்க கல்வி முறைப் பள்ளிகளில் 16 சதவிகித மாணவர்களும் பயின்று வருவதாக அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...