ஜாம்பியாவில் ஏற்பட்ட தாமிரச் சுரங்க விபத்தில் புதைந்துபோன தொழிலாளர்களை மீட்கும் பணி 6 நாள்களாக தொடர்ந்து நடந்துவரும் நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக நடைபெற்ற இந்தத் தாமிரச்சுரங்கப் பணியின்போது கனமழை காரணமாக மணல் சரிவு ஏற்பட்டு விபத்தானது. இதில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டுள்ளனர்.
மேலும், இறந்த ஒரு தொழிலாளரின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக ஜாம்பியா பேரிடர் மேலாண்மைப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: புறாவைக் கொல்ல முயற்சி: ஓட்டுநர் கைது!
இடிபாடுகளில் மொத்தம் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற சரியான விவரம் கிடைக்காத நிலையில், 25 குடும்பங்கள், காணாமல் போன உறவினர்கள் தொடர்பான தகவல்களைத் தெரிவித்துள்ளதாக ஜாம்பியாவின் சுரங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதைந்த சுரங்கத்திலிருந்து பல குரல்கள் கேட்பதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.