கடந்த திங்கள் கிழமை சீனாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 3 நாள்களுக்கு முன்னதாகவே அச்சுறுத்தும் சமிக்ஞைகளைப் பெற்றதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஏற்படப்போகும் நிலநடுக்கம் சீனாவில் எந்த இடத்தைத் தாக்கப் போகிறது என்பதில் பெரும் குழப்பமடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் 131 பேர் இறந்துள்ளனர். 700க்கும் அதிகமான மக்கள் காயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பயங்கரமான நிலநடுக்கமாகக் கருதப்படும் இது, சீனாவில் கான்சு மற்றும் கின்காய் ஆகிய பகுதிகளைத் தாக்கியது.
பொதுவாகவே ஏற்படப்போகும் நிலநடுக்கங்களை முன்கூட்டிய கண்டுபிடிப்பதென்பது முடியாத காரியமாகவே கருதப்பட்டு வந்த நிலையில் சீன விஞ்ஞானிகள் அந்தப் பணியில் சிறந்தவர்களாக விளங்கினார்கள்.
இதையும் படிக்க: காணாமல் போன இந்திய மாணவி: தகவல் தருபவருக்கு சன்மானம்!
சீனாவின் ஷான்க்ஷி மாகாணத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 7.0 ரிக்டர் அல்லது அதற்கு அதிகமான அளவிலான நிலநடுக்கங்களை அவை வருவதற்கு முன்னரே தங்களால் கண்டுபிடிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவ்வளவு பெரிய நிலநடுக்கங்கள் எந்தப் பகுதியைத் தாக்கப்போகின்றன எனக் கண்டுபிடிப்பது சிரமமான விசயம் எனக் கூறியுள்ளனர்.
புவியீர்ப்பு புலத்தின் அதிர்வெண்களில் ஏற்படும் சீரற்ற மாற்றத்தை கடந்த வெள்ளிக்கிழமையே கவனித்ததாகவும், நிலநடுக்கம் ஏற்படப்போவதை ஊகித்ததாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சீனாவின் எல்லைக்குள் அது நடக்கப்போவதை ஊகிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.