கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் மெமோவில் சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கும் இந்த தகவல் ராய்டர்ஸ் மூலம் ஊடகங்களுக்குத் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே, தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாளர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் நீக்கம் செய்யப்பட்டு வருவது, அத்துறையில் இருப்பவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் 10,000 ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா அறிவித்திருந்த அடுத்த ஓரிரு நாள்களில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பே, இந்த பணிநீக்க நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. உலகின் முன்னணி நிறுவனங்களான் அமேஸான், மீட்டா ஆகியவை அப்போதே இதனைச் செய்துவிட்டன. இதுபோன்ற பணிநீக்க நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறையையும் பாதிக்கும். சில குறிப்பிடத்தக்க முக்கிய குழுக்களையும் அது பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.