

பிரேசிலியா: பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாண தலைநகரான ரெசிஃப் நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகினர், குழந்தைகள் உட்பட 5 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்கு பிரேசிலில் ரெசிஃப் நகரின் ஜங்கா பகுதியில் அமைந்துள்ள நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் இடிந்து விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் விரைந்து ஈடுபட்டனர்.
கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு ஆண், 8 மற்றும் 5 வயது குழந்தைகள் உட்பட 8 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர், அதே நேரத்தில் 65 வயது பெண் மற்றும் 15 வயதுடைய இருவர் என 4 பேர் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் உட்பட 5 பேரைக் காணவில்லை என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டடத்தின் ஒரு பகுதி முழுமையாக இடிந்து விழுந்துள்ளது, மற்றொரு பகுதி பாதியளவுக்கு இடிந்து விழுந்துள்ளது.
மேலும் அந்த பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்னர்.
அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
சுமார் 15 லட்சம் மக்கள் வசிக்கும் கடலோர நகரமான ரெசிஃப் நகரில் சமீப நாட்களாக கடும் மழையுடன் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.