கரோனா சுகாதார அவசரநிலை இனி கிடையாது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

கரோனா தொற்று பாதிப்பு குறித்த சுகாதார அவசர நிலை இனி வராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கரோனா சுகாதார அவசரநிலை இனி கிடையாது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

நியூயார்க்: கரோனா நோய்த்தொற்று பாதிப்பு "கீழ்நோக்கிய போக்கில்" உள்ளது, ஆனால் புதிய மாறுபாடுகளால் ஆபத்து உள்ளது என்றும், கரோனா தொற்று பாதிப்பு குறித்த சுகாதார அவசர நிலை இனி வராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் இந்த கரோனா உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கரோனாவை கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளும் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன. 

உலக சுகாதார அமைப்பு கரோனாவை சர்வதேச அவசர நிலையாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அறிவித்தது. 

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழு கூட்டம் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ் தலைமையில் வியாழக்கிழமை கூடியது.

கூட்டத்துக்குப் பின்னர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் சர்வதேச சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தாலும், அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் கரோனாவுடன் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

கரோனா தொற்று சர்வதேச பொது சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது என்றும் "உலக நாடுகள் சர்வதேச அவசர நிலை பயன்முறையில் இருந்து மற்ற தொற்று நோய்களுடன் கரோனாவை நிர்வகிப்பதற்கான நேரம் இது."

கரோனா தொற்றுக்குப் பிந்தைய பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். கரோனா தொற்று இன்னமும் இருக்கிறது. தொடர்ந்து மக்களை கொல்கிறது. அதுவொரு சவாலாகவே உள்ளது. அதேநேரம் தொற்று பாதிப்பால் உயிரிழப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் குறைந்து வரும் நிலை மற்றும் தொற்றுக்கு எதிராக அதிகயளவு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதால் கரோனா குறித்து இனியும் மக்கள் கவலைப்பட தேவையில்லை. 

கடந்த 3 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றை தொடர்ந்து கண்காணித்து வந்த அவசரநிலைக் குழு, மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்துள்ளது. அந்தக் குழுவின் ஆலோசனைப்படியே, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. “இது ஒரு திடீர் முடிவு அல்ல. இது சில காலமாக கவனமாக பரிசீலிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு, தரவுகளை கவனமாக பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு,” கரோனா பாதிப்பு தொடர்பான சுகாதார அவசரநிலை இனி ஏற்படாது என்று அவர் கூறினார்.

மேலும், கரோனாவை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து நாடுகளுக்கு நீண்டகால பரிந்துரைகளை உருவாக்க மறுஆய்வுக் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com