எதிர்காலத்தில் மனிதர்களின் 80 சதவிகித பணிகளுக்கு, செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) மாற்றாக இருக்கும் என அமெரிக்க – பிரேசில் ஆராய்ச்சியாளர் பென் கோர்ட்செல் (Ben Goertzel) தகவல் தெரிவித்துள்ளார்.
மருத்துவத் துறையில் செவிலியர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு உலகளவில் போதுமான நபர்கள் இல்லாத சூழலில், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய இயந்திரங்கள் அந்த இடங்களுக்கு மாற்றாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
கணிதவியலாளரும் அறிவாற்றல் விஞ்ஞானியுமான பென் கோர்ட்செல், சிங்குலாரிட்டி நெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இவர், செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களை வடிவமைப்பதிலும் ஈடுபாடு கொண்டவர்.
இந்நிலையில், ரியோடிஜெனிரியோவில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாட்டில் அவர் கலந்துகொண்டு, இணைய வாயிலாக அறிக்கையையும் சமர்ப்பித்தார்.
இதில், அறிஞர்களின் கேள்விக்கு பதிலளித்த கோர்ட்செல், இயந்திரங்கள் மனித செயல்பாடுகளுக்கு ஈடுகொடுத்து சிந்தித்து செயல்படக்கூடியதாக எதிர்பார்த்தால், அதற்கு மிக நீண்ட பயிற்சிக்கும், புரோகிராமிங்-களுக்கும் காத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதில், மனித பணிகளுக்கு மாற்றாக செய்யறிவு மாறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மனிதர்களின் 80 சதவிகித பணிகளுக்கு செய்யறிவுகள் மாற்றாக அமையும். சேட் ஜிபிடி போன்ற மென்பொருள் சாதனங்களால் மட்டுமல்ல. செய்யறிவுத் துறையில் இயற்கையாகவே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அடுத்தடுத்தகட்டத்துக்கு செல்லும்போது இது நடக்கும். இது அபாயகரமானதாக நான் நினைக்கவில்லை. இதன் பலனை நான் நினைத்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.