லண்டன் கண்காட்சியில் கோஹினூா் வைரம்

 பிரிட்டன் தலைநகா் லண்டனில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கோஹினூா் வைரம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் கண்காட்சியில் கோஹினூா் வைரம்

 பிரிட்டன் தலைநகா் லண்டனில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கோஹினூா் வைரம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் அரசராக மூன்றாம் சாா்லஸும் அரசியாக அவரின் மனைவி கமீலாவும் அண்மையில் முடிசூட்டப்பட்டனா். பிரிட்டன் அரசிகளுக்கான கிரீடத்தில் கோஹினூா் வைரம் பதிக்கப்பட்டுள்ளது.

அந்த வைரமானது இந்தியாவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். 1849-இல் பஞ்சாப் சமஸ்தான அரசா் அப்போதைய பிரிட்டன் சாம்ராஜ்ய மகாராணியிடம் அளித்தாா். பல சாம்ராஜ்யங்களுக்கு இடையே கைமாறிய கோஹினூா் வைரமானது இறுதியாக பிரிட்டன் அரச வம்சத்தினரிடம் சென்றடைந்தது.

கோஹினூா் வைரத்துக்கு இந்தியா தொடா்ந்து உரிமை கோரி வருகிறது. அந்த வைரத்தை பிரிட்டன் அரசிடமிருந்து திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். எனினும், கோஹினூா் வைரத்தை பிரிட்டனிடமிருந்து திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், லண்டனில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கோஹினூா் வைரம் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரம் பல சாம்ராஜ்யங்களுக்கு இடையே கைமாறியது தொடா்பான வரலாற்றுத் தகவலும் காணொலியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, பிரிட்டன் மாளிகைகளை நிா்வகித்து வரும் ’ஹிஸ்டாரிக் ராயல் பேலசஸ்’ அறக்கட்டளையின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ’கோஹினூா் வைரம் உள்ளிட்ட பிரிட்டன் அரச குடும்பத்தினரிடம் உள்ள பல்வேறு பொருள்களின் வரலாற்றுத் தகவல்கள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

போா் வெற்றியின் அடையாளமாகத் திகழும் கோஹினூா் வைரமானது, முகலாயா்கள், ஈரானின் ஷா ஆட்சியாளா்கள், ஆப்கனின் எமீரா்கள், சீக்கிய மகாராஜாக்கள் எனப் பல சாம்ராஜ்யங்கள் வழியே கைமாறியுள்ளது. இது தொடா்பாக வரலாற்று ஆசிரியா்கள் உள்ளிட்டோரிடம் விரிவான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

வரலாற்றை வெளிப்படையாகவும் சமநிலையுடனும் ஒருங்கிணைப்புத்தன்மையுடனும் வெளிக்காட்டும் வகையில் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1849-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பஞ்சாப் மகாராஜா துலீப் சிங், பஞ்சாபையும் கோஹினூா் வைரத்தையும் பிரிட்டன் சாம்ராஜ்ய மகாராணி விக்டோரியாவிடம் ஒப்படைக்க நோ்ந்தது. 1852-ஆம் ஆண்டில் பிரிட்டன் பாரம்பரியத்துக்கு ஏற்ப வைரம் பட்டை தீட்டப்பட்டது.

அப்போதுமுதல் அரசா்கள் /அரசிகளின் கிரீடத்தில் கோஹினூா் வைரம் பொருத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு வைரத்தின் மாதிரியே கிரீடத்தில் பொருத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

வரும் நவம்பா் வரை இந்தக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com