தாய்லாந்து தலைநகரில் நடைபெற்று வரும் உலக இந்து இயக்க மாநாட்டின் முதல் நாளில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் ஒன்றுபடவும் அதன் மூலம் உலகை இணைக்கவும் அறிவுறுத்தி பேசியுள்ளார்.
மாநாட்டின் உரையில் அவர் தெரிவித்தாவது:
நாம் அனைத்து இந்து மதத்தினரையும் ஒன்றுபடுத்த வேண்டும். இந்துக்கள் இணைந்து உலகத்தில் உள்ள எல்லோரையும் இணைக்க வேண்டும். இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் சேரும்போது உலகத்தை இணைக்கிற வேலையும் தொடங்கிவிடும்.
இன்றைய உலகம் திணறி வருகிறது. 2000 ஆண்டுகளாக மகிழ்ச்சி, இன்பம் மற்றும் அமைதியை அடைய பல்வேறு முயற்சிகள் நடந்திருக்கின்றன. பொருள்முதல்வாதம், பொதுவுடமை, முதலாளித்துவம் வழியாக முயற்சி செய்திருக்கிறார்கள். பொருள் வளம் தான் செழிப்பு என அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆனால் அதில் நிறைவு இல்லை. கரோனாவுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். பாரதம் அவர்களுக்கு வழியைக் காட்டும் என ஒருமனதாக சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள்.
நாம் எல்லோரையும் சென்று சேர வேண்டும், இந்து மதத்தினர் இணைந்து நமது சேவையின் மூலம் மற்றவர்களை இணைக்க வேண்டும். நமக்கு அந்த ஆற்றல் உள்ளது. சுயநலமற்ற சேவையில் உலகின் விளிம்பில் நாம் நிற்கிறோம். நமது பண்பாடு மற்றும் மதிப்பீடுகள் அவை. ஆகவே சென்று சேருங்கள், அவர்களின் இதயத்தை வெல்லுங்கள் என அவர் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: சீனாவில் பரவும் மா்மக் காய்ச்சல்: இந்தியாவிற்கு ஆபத்தா?
மேலும், நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்வு மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.