வாடிகன் நகரில் இன்றைய வாராந்திர மக்கள் சந்திப்பின்போது போப் பிரான்சிஸ் எதுவும் பேசவில்லை.
உடல்நலக் குறைவு காரணமாக நேற்று தன் வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்த நிலையில், இன்றைய மக்கள் சந்திப்புக்கு வந்திருந்தார் போப் பிரான்சிஸ்.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்று குறிப்பிட்ட அவர், தன்னுடைய உரைக் குறிப்புகளை உடனிருப்பவர் வாசிப்பார் என்று தெரிவித்துவிட்டு இருக்கையில் அமர்ந்துவிட்டார்.
வரும் டிச. 17 ஆம் தேதியுடன் 87 வயது நிறைவு பெறும் போப் பிரான்சிஸ் இளம் வயதினராக இருந்தபோதே அவருடைய நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டுவிட்டது.
மக்கள் முன் மிக மெல்லிய குரலில் பேசிய அவர், 'எனக்கு உடல்நிலை சரியில்லாததால்...' எனக் குறிப்பிட்டுவிட்டு, தயாரிக்கப்பட்ட உரையின் பிரதியை உதவியாளரிடம் வாசிக்கக் கொடுத்துவிட்டுத் தொடர்ந்து மேடையிலேயே அமர்ந்திருந்தார்.
இதையும் படிக்க | பிலிப்பின்ஸில் அமைதிக்கான பேச்சு: அரசு, போராளிகள் ஒப்புதல்
துபையில் நடைபெறும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக வெள்ளிக்கிழமை செல்லவிருந்தார் போப். எனினும், நுரையீரல் அழற்சி தொடர்பான சுவாசப் பிரச்சினை காரணமாக போப் பிரான்சிஸை வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என டாக்டர் அறிவுறுத்தினர். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மூன்று நாள்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் போப் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.