முன்னர் ட்விட்டர் என்கிற பெயரால் அறியப்பட்ட எக்ஸ், சமூக வலைத்தளம் தனது பயனர்களுக்கு புதிய சந்தாத்தாரர் திட்டம் ஒன்றைச் சோதனை முயற்சியாக வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தில் சந்தாத்தொகை செலுத்தாத பயனர்கள், இனிமேல் எக்ஸ் தளத்தில் பதிவிடவோ தாங்கள் காண்கிற ட்விட்டுகளுக்கு விருப்பக்குறியோ பின்னூட்டமோ ரீ-ட்விட்டோ உள்ளிட முடியாது.
இதில் இணைய ஒரு ஆண்டுக்கான சந்தாத்தொகை, ஒரு அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாட்டின் பணமதிப்பேற்கேற்ப மாறும்.
இந்தத் திட்டத்திற்கு ‘நாட் ஏ பாட்’ (செயற்கை பயனர் அல்ல) எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஆரம்பகட்டமாக இது பிலிப்பைன்ஸ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஓலா, உபெர் கட்டணம் திடீர் உயர்வு!
பிரிமீயம் இல்லாத பயனர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். ஏற்கெனவே, பயனர்களாக இருப்பவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது எக்ஸ்.
`போலி பதிவுகள் (ஸ்பேம்), செயற்கையான கணக்குகள் (பாட்), பாரபட்சமான கையாளுகை ஆகியவற்றை முடக்கும் எங்களின் வெற்றிகரமான செயலுக்கு வலுவூட்டும் விதத்தில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென மிகக் குறைவான கட்டணமே வசூலிக்கிறோம். இந்தத் திட்டம் நிச்சயமாக இலாபத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தவில்லை’ எனக் கூறுகிறது எக்ஸ் தளம்.
எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கியது முதல் அதன் பயனர்களுக்கு பல அதிர்ச்சிக்குரிய அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
சமீபத்தில் பயனர்கள் குறிப்பிட்டளவுக்கு மேல் பதிவுகளைக் காண இயலாது என்கிற அப்டேட் வெளியானது.
ஏற்கெனவே நடைமுறையிலுள்ள எக்ஸ் பிரீமியம் சேவைக்கு, இந்தியாவில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கு, ஆண்டு சந்தாவாக ரூபாய் 900-ம் இணைய பயனர்களுக்கு ரூபாய் 650-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தகக்கது.