15 நிமிடத்திற்கு ஒரு குழந்தை: அச்சுறுத்தும் காஸாவின் இறப்பு விகிதம்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் நாளொன்றிற்கு 100-க்கும் அதிகமான குழந்தைகள் உயிழந்து வருகின்றனர்.
காயமுற்ற பாலஸ்தீனிய சிறுவர்கள்
காயமுற்ற பாலஸ்தீனிய சிறுவர்கள்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையேயான போரில் அதிகம் பாதிப்படுபவர்களாகக் குழந்தைகள் இருந்து வருவது, குழந்தைகளுக்கான உலக பாதுகாப்பு அமைப்புகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அக்.7-ம் தேதி தொடங்கிய போர் 13-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. இந்தத் தாக்குதலில் 15 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பலியாகி வருவதாகக் கவலை தெரிவிக்கிறது அரசு சார்பற்ற சர்வதேச குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு.

போரும் குழந்தைகளும்

இஸ்ரேல் மீதான ஹமாஸின் பயங்கரவாத தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் பலியானார்கள். அவர்களில் இதுவரை அறியப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 14-ஆக உள்ளது . ஹமாஸால் பிணைக்கைதிகளாகக் கடத்தி செல்லப்பட்டவர்களிலும் குழந்தைகள் உள்ளனர்.  

இதற்கு எதிர்வினையாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் பலியாகும் பாலஸ்தீனர்களில் நாளொன்றிற்கு 100-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரழந்து வருகின்றனர்.

இடிபாடுகளிடையே மீட்கப்பட்ட சிறுவன்
இடிபாடுகளிடையே மீட்கப்பட்ட சிறுவன்

போர் விதிமுறைகள்

ஆயுதம் ஏந்திய போருக்கான சர்வதேச விதிமுறைகள், போரில் குழந்தைகள் பாதுக்கப்படுவதும் மனிதநேயத்தோடு நடத்தப்படவும் வேண்டும் என வலியுறுத்துகிறது.

1951-ல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இஸ்ரேல் அதற்கு சில வருடங்கள் முன்பு தான் மிகப்பெரிய படுகொலையில் லட்சக்கணக்கிலான யூத குழந்தைகளைப் பலியாகக் கொடுத்திருந்தது. 

ஹமாஸை அழிக்கத்தான் இந்தத் தாக்குதல் என இஸ்ரேல் தரப்பில் சொல்லப்பட்டாலும் அப்பாவி பொதுமக்கள் இதனால் இறந்து போகின்றனர், அவர்களில் குழந்தைகளும் அடக்கம் என்பதே நிதர்சனம். 

காயமுற்ற சிறுமி
காயமுற்ற சிறுமி

போரில் வளரும் குழந்தைகள்

இஸ்ரேல்-பாலஸ்தீன போரைக் குழந்தைகளுக்கு எதிரான போர் எனக் குறிப்பிடுகிறார் காஸாவில் பணிபுரியும் பிரிட்டன் மருத்துவர் காஸன் அபு-சிதா.  

போரில் தான் இந்தக் குழந்தைகள் வளர்கின்றனர். 2008 தொடங்கி இப்பொது 5-வது முறையாக இஸ்ரேலும் பாலஸ்தானும் போரில் எதிர்கொள்கின்றனர்.

இதனால், போர்ச் சூழலில் வளரும் குழந்தைகள் மனரீதியாக, உணர்வுரீதியாக, பழக்கவழக்க ரீதியாக பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

உடனடி தேவை  

மேலும், இந்தப் போர் எப்போது முடியும் என்பது தெரியாது. ஆனால் முடியும்போது உயிரோடு இருப்பவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்தும் எப்படி வாழ்வது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார் அபு-சிதா. 

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்), “உடனடியான போர் நிறுத்தமும் வாழ்வாதார உதவிகளுமே குழந்தைகள் மற்றும் அந்த மக்களின் முதன்மையான தேவை, குழந்தை என்பது குழந்தை தான். எல்லா இடங்களில் இருக்கும் குழந்தைகளும் எல்லா நேரமும் பாதுக்கப்பட வேண்டும். தாக்குதலுக்கு ஆளாக அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளது.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com