கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ஹிந்து கோயிலில் ஆறு பேர் கொண்ட கும்பல், உண்டியலை திருடிச்சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் பார்க் வே பகுதியில், ராதா - கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அமெரிக்கவாழ் ஹிந்து மக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்தக் கோயிலில் திங்கள் கிழமை (அக்.30) அதிகாலை 2 மணியளவில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக மாகாண காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆறுபேர் கோயில் வளாகத்தில் இருப்பதும், அவர்களில் இருவர் மட்டும் கோயிலுக்குள் சென்று உண்டியலை எடுத்து வருவதும் பதிவாகியுள்ளது.thirudupOna பின்னர் ஆறுபேரும் உண்டியலுடன் காரில் செல்வது போன்று சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களின் மொத்த விவரம் குறித்து காவல் துறை தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் மட்டும் திருடுபோனது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஒருவரையும் இதுவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.