டோக்கியோ: நிலவை ஆய்வு செய்வதற்காக ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக வியாழக்கிழமை காலை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது.
எதிர்கால ஆய்வுக்கு உதவும் வகையில் நிலவில் ஆய்வு செய்வதற்கான ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் உருவாக்கியது. இந்த விண்கலம் நிலவில் பாறைகளை ஆராய்வது மற்றும் விண்கலத்தை துல்லியமாக தரையிறங்கும் நடைமுறைகளைக் காண்பிப்பதற்காக 200 கிலோ எடை கொண்ட விண்கலத்தில் பிளாஸ்டிக் சோலார் பேனல், மிக நுண்ணிய கேமராக்கள், நேனோ டெக்னாலஜியால் சுருக்கப்பட்ட மின்னணு பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு வெற்றியடைந்தால் நிலவில் ஆய்வு விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய உலகின் ஐந்தாவது நாடாக ஜப்பான் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே மோசமான வானிலை காரணமாக ஸ்லிம் விண்கத்தை ஏவும் பணி மூன்று முறை தள்ளிபோனது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 8.42 மணியளவில்(உள்ளூர் நேரப்படி), ஜப்பானின் தென்மேற்கில் உள்ள ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஸ்லிம் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியதால், அப்பகுதியில் தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியாவுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா உருவானது.