லிபியாவை தாக்கிய புயல், வெள்ளத்தில் சிக்கி சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
கிழக்கு லிபியாவில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு லிபியா. இங்கு உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், லிபியாவை தாக்கிய டேனியல் புயலால் அந்நாட்டின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்கள் பெருமளவில் பாதித்துள்ளது. பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
புயல், கனமழை வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி 5000 பேர் வரை காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. புயலில் மாயமானவர்களை மீட்புப் படையினர் மும்மரமாகத் தேடி வருகின்றனர்.
வெள்ளம் பாதித்த டெர்னா நகரை பேரழிவு மண்டலமாக அந்நாட்டுப் பிரதமர் ஒசாமா ஹமாட் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.