காஸாவில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போரில் 49,645 பேர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அஷ்ரஃப் அல்-கத்ரா கூறுகையில், உலகம் முழுவதுமிருக்கும் மருத்துவக் குழுக்கள் உடனடியாக காஸா விரைந்து வந்து, அங்கு சிகிச்சைக்காகக் காத்திருப்பர்களுக்கு உதவ வேண்டும் என்றும், நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற காஸாவிலிருந்து வெளியேற தயாராக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காஸா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 297 போ் உயிரிழந்தனா்; 550-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இத்துடன், கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 17,997-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 49,500-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா் என்றாா் அவா்.
இஸ்ரேல் பக்கம்..
ஒரு மாதத்துக்கும் மேலாக, காஸாவுக்குள் நடைபெற்று வரும் தரைவழித் தாக்குதலின்போது தங்கள் நாட்டு ராணுவத்தைச் சோ்ந்த 104 போ் உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், காஸாவுக்குள் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகளின்போது இதுவரை 104 வீரா்கள் உயிரிழந்துள்ளனா். இது தவிர, காஸாவில் 582 வீரா்கள் காயமடைந்துள்ளனா்.
கடந்த அக். 7-ஆம் தேதிக்குப் பிறகு இதுவரை 433 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்துள்ளனா்; 1,645 வீரா்கள் காயமடைந்துள்ளனா்.