நியூ யார்க்: அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாகாணத்தில், மிகப் பணக்கார இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி, அவர்களது மகள் வீட்டுக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், ராகேஷ் கமல் (57), மனைவி டீனா (54), மகள் அரியனா (18) ஆகியோர், அவர்களது டோவர் பகுதியில் உள்ள மேன்ஷனில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
போஸ்டனிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் டோவர் அமைந்துள்ளது. இது குடும்ப வன்முறை காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கணவரின் உடல் அருகே கைத்துப்பாக்கியை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
இதையும் படிக்க.. 2023 - விளையாட்டுத் துறையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வுகள்!
மாவட்ட நீதிபதி இந்த சம்பவம் குறித்து, மிகப் பயங்கர சம்பவம் என்று குறிப்பிட்டிருக்கிறார். மூன்று பேரும் இறந்துவிட்டார்கள் என்றால் யார் கொன்றிருப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உடல் கூறாய்வு முடிவுகளுக்காக காவல்துறையினர் காத்திருக்கிறார்கள். முடிவுகள் வெளியானால்தான் கொலை - தற்கொலை சம்பவமா என்பது தெரிய வரும் என்று தெரிவிக்கிறார்கள்.
இந்த தம்பதி கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், குடும்பத்தில் பிரச்னைகள் இருந்ததாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீனா தில்லி பல்கலையிலும் பிறகு ஹார்வேர்ட் பல்கலையிலும் படித்துள்ளார். கமல், போஸ்டன் மற்றும் எம்ஐடி ஸ்லோவான் மேலாண்மை கல்வி மையம் மற்றும் ஸ்டான்ட்போர்டு பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.
ஆன்லைனில் கல்வி வழங்கும் தனியார் மையத்தில் இவர்கள் பணியாற்றியதாகவும் அதில் பல பெரிய பொறுப்புகளை வகித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.