‘இவர் ஹமாஸா?’ - ஏஐ சொல்லும்; இஸ்ரேல் தாக்கும்! அதிர வைக்கும் ரகசிய தகவல்!!

ஏஐ பயன்பாடு; ஹமாஸ் அழிப்பு - இஸ்ரேலின் சர்வதேச அழுத்தம்!
மாதிரி படம்
மாதிரி படம்Pixabay

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு- ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் தாக்கும் இலக்கினை நிர்ணயித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அக்.7 தொடங்கிய போர் ஆறு மாத காலமாக தொடர்ந்துவரும் நிலையில் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்த நிலையில் +972 செய்தி நிறுவனமும் ஹீப்ரு மொழியில் வெளியாகும் ‘லோக்கல் கால்’ செய்தி இணையதளமும் இணைந்து செய்தி விசாரணை மேற்கொண்டன. இஸ்ரேலின் செய்யறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் மற்றும் வளர்ச்சியில் உடனிருந்த 6 அதிகாரிகளிடம் அவர்கள் பேசியுள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

‘லேவண்டர்’

செய்தி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது லேவண்டர் என்கிற செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரே முறையில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான, பயங்கரவாதிகளாக இருப்பதற்கு சாத்தியமுள்ள நபர்களை இலக்குகளாக இஸ்ரேல் கண்டறிந்துள்ளது.

மெஷின் லேர்னிங் எனச் சொல்லப்படுகிற தானாகவே கற்றல் முறையில் செயல்படும் இந்த தொழில்நுட்பம் பயங்கரவாதிகளின் குணாதிசயங்களை கொண்டு மனிதர்களை 1 முதல் 100 மதிப்பெண்களுக்குள் மதிப்பிடும். பயங்கரவாதிகளுடனான தொடர்புள்ளவர்கள், அடிக்கடி அலைபேசி மாற்றுபவர்கள் இப்படியான அளவீடுகள் வழியாக இதனை லேவண்டர் செய்யும்.

மாதிரி படம்
காஸா மீதான தாக்குதலில் செய்யறிவைப் பயன்படுத்தும் இஸ்ரேல்! முதல் முறை!!

முன்னர் ‘கோஸ்பெல்’ என்கிற ஏஐ குறித்து தகவல் வெளியானடு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் கோஸ்பெல் பயங்கரவாதிகள் புழங்க சாத்தியமுள்ள இடங்களை, கட்டடங்களை கண்டறியும். ‘லேவண்டர்’ மனிதர்களை கண்டறியும்.

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் உயர்மட்ட யூனிட் 8200 பிரிவால் இந்த செய்யறிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கார்டியன் இதழிடம் இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், “நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தத்துக்கு உள்ளானோம். ‘அதிக இலக்குகளை கொண்டு வாருங்கள்’ என அதிகாரிகள் கத்தினர். எங்களிடம் சொல்லப்பட்டது: ‘நாம் ஹமாஸை தீர்த்து கட்ட வேண்டும். என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை. நீங்கள் செய்ய வேண்டியது தாக்குவது மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.

‘லேவண்டர்’ எப்படி பயன்படுத்தப்பட்டது?

முதலில் செய்யறிவு தொழில்நுட்பத்தை சோதிக்கும்போது உடனிருந்த அதிகாரிகள், லேவண்டர் போரில் எவ்வாறு பயன்பட்டது என்பதை குறித்து தெரிவித்தனர்.

இந்த போரில் முக்கியமான பணியை லேவண்டர் செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுகின்றனர்.

ஜுனியர் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களை பல்வேறு தரவுகளிலிருந்து லேவண்டர் தயாரித்து கொடுத்ததாகவும் போரின் ஒரு கட்டத்தில் 37 ஆயிரம் பாலஸ்தீனர்கள் வரை லேவண்டர் அடையாளம் காட்டியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போரின் ஆரம்பத்தில் இந்த தரவுகள் எந்தவிதத்திலும் மறுஆய்வு செய்யப்படாமல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணை அறிக்கை குறிப்பிடுகிறது.

போரில் பயங்கரவாதிகள் என கண்டறியப்பட்டவர்களின் வீடுகள் தாக்கப்படும்போது உடனிருப்பவர்கள் சேர்ந்து உயிரிழக்க நேரிடும். அதற்கான அளவையும் இஸ்ரேல் கொண்டிருந்ததது.

இளம் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்படுவதற்கு 15-20 பொதுமக்கள் கொல்லப்படலாம். மூத்த பயங்கரவாதி எனில் 100 பொதுமக்கள் வரை கொல்லலாம், படைத் தளபதி எனில் இத்தனை மக்கள் என கணக்கீடு இஸ்ரேலிடம் வைத்திருந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேல் ராணுவம்AP

இஸ்ரேலின் மறுப்பு

+972 செய்தி நிறுவனத்தின் தகவலை இஸ்ரேல் முற்றிலும் மறுத்துள்ளது. அப்படியான இலக்கை நிர்ணயிக்க எந்த செய்யறிவு தொழில்நுட்பத்தையும் நாங்கள் பயன்படுத்தவில்லை. மேலும், தகவல் அமைப்புகள் என்பவை இலக்கை நிர்ணயிப்பவர்களுக்கு கருவியாக பயன்படுமே தவிர வேறு எதுவுமில்லை என மறுத்துள்ளது.

அதே போல, ஜுனியர் ஹமாஸ் வீரருக்கு இத்தனை மக்கள், மூத்த ஹமாஸ் வீரருக்கு இத்தனை மக்கள் கொல்லப்படலாம் என்கிற எந்த கணக்கும் இல்லை. தவறான திசையில் செலுத்துகிற செய்தி அறிக்கை இது என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் லெர்னர் தெரிவித்துள்ளார்.

நிவாரண உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் உலக நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் இந்த ரகசிய ஏஐ பயன்பாடு குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com