காஸாவில் பிணைக்கைதியாக சிக்கியுள்ள காதலனுக்காக 6 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கிறார் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த காதலி ஒருவர்.
காஸாவில் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், காதலனை மீட்டுத் தருமாறு காதலி கோரிக்கை வைத்துள்ளார்.
தெற்கு இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற திறந்தவெளி இசைநிகழ்ச்சி மீது காஸா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 130 பேரை பிணைக்கைதிகளாக காஸா பிடித்துச்சென்றது. (அவர்களை இன்னும் விடுவிக்கவிக்கப்படவில்லை)
இந்த இசை நிகழ்ச்சியில் ஸிவ் அபுத் என்ற 26 வயது இளம்பெண், தனது காதலன் எலியா கோஹனுடன் கலந்துகொண்டார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஸிவ் அபுத் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். காதலன் கோஹனை காஸா படையினர் பிணைக்கைதியாக்கினர்.
இஸ்ரேலின் டெல் அவிவ் சதுக்கத்தில் காஸாவிடம் பிணைக்கைதியாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அவ்வபோது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காதலி ஸிவ் அபுத், பிணைக்கைதியாக்கப்பட்டவர்களை மீட்க நாம் இன்னும் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும். தற்போது இஸ்ரேல் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதியதாக இல்லை. அவர்கள் உயிருடன் வர வேண்டும். அதுவும் உடனடியாக திரும்ப வேண்டும் என எதிர்பார்க்கிறேன். பிணைக்கைதியாக்கப்பட்டவர்களை சவப்பெட்டியில் பெறுவது வெற்றியாகாது எனக் கூறினார்.
காஸாவிடம் பிணைக் கைதியாக்கப்பட்டவர்களை மீட்க இஸ்ரேல் அதிக அழுத்தம் தர வேண்டும் என தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.