காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தனது 3 மகன்களும் கொல்லப்பட்ட தகவலை ஹமாஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவிடம் சொல்லும்போது எடுக்கப்பட்ட விடியோ பலராலும் பார்க்கப்பட்ட விடியோவாக மாறியிருக்கிறது.
ஹமாஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் குடும்பத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று மகன்களுடன், அவரது 3 பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில், அதுவும் ரமலான் நாளில் தனது மூன்று மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் கொல்லப்பட்டது தொடர்பான தகவல் இஸ்மாயில் ஹனியேவிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட விடியோ எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்டு தற்போது அவர் கத்தாரில் வசித்து வரும் நிலையில், கத்தாரில் காயமடைந்த பாலஸ்தீனியர்களைக் காண மருத்துவமனைக்கு வந்திருந்தபோது, அவரிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரிடம் மகன்களும் பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதும், அவர் ஒரு வினாடி மௌனமடைந்து நிலத்தைப் பார்த்தார். பிறகு இறைவன் திருவடியை சேரட்டும் என்று பிரார்த்தித்தவாறு அவ்விடத்தைக் கடந்து சென்றார். இந்த தாக்குதலில், மூன்று பேத்திகளும் பேரன்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காஸாவில் உள்ள அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தினர் கூறுகையில், இஸ்மாயிலின் மூன்று மகன்களுமே திறமையான போராளிகள் என்று தெரிவித்துள்ளது.
எகிப்தில் நடைபெற்று வரும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடவே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பதாக காஸா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.