ஈரானின் சமீபத்திய இஸ்ரேல் மீதான தாக்குதலையடுத்து இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் தொடர்ந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி எச்சரித்துள்ளார்.
கத்தார் நாட்டு மன்னர் தமீம் பின் ஹமத் அல் தானி உடனான அலைபேசி உரையாடலில், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் சிறிய நடவடிக்கை கூட பெரிய மற்றும் வலிமிக்க பின்விளைவுகளை சந்திக்கும் என ச்சரித்துள்ளார்.
ஈரானின் அதிபர் அலுவலகம் தனது இணையத்தளத்தில் இந்த உரையாடல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
முன்னதாக சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தளபதிகள் உள்பட 12 பேர் பலியாகினர். அதற்கு பதிலடியாக சனிக்கிழமை இரவு ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான கணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து இஸ்ரேலின் நடவடிக்கை தொடர்ந்தால் அதற்கான பதில்வினை முதல் தாக்குதலை விட 10 மடங்கு கடுமையாக இருக்கும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுன்சில் வெளியிட்ட குறிப்பில், இதுவரை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையற்ற தண்டனையையே தேர்வு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுக்கும் என அந்நாடு அறிவித்துள்ள நிலையில் ஈரான் அதிபரின் இந்த அறிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.