இஸ்ரேல் ராணுவ தளபதி, ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய சரமாரியான ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
லெப்டினண்ட் ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி, திங்கள்கிழமை, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேல் ஆலோசித்து வருவதாகவும் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகேரி, இஸ்ரேல், தக்க நேரத்தில் இஸ்ரேல் ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.
ஈரான் 300-க்கும் அதிகமான ஏவுகணைகளை வார இறுதியில் இஸ்ரேல் மீது ஏவியது. 99 சதவிகித கணைகளை இஸ்ரேல் வானிலேயே எதிர்கொண்டு அழித்தது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட நெவடிம் விமான தளத்தை, ஹலேவி பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் போர் விரிவடையும் ஆபத்தை கருத்தில் கொண்டு இஸ்ரேல் பதிலடி கொடுப்பதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மேல்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.