/

ஈரானுக்கு பதிலடி தாக்குதல்: வளைகுடா கவுன்சில் எச்சரிக்கை

வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்திவரும் ஈரானுக்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) கடும் கண்டனம்

News image
Updated On :3 மார்ச் 2026, 1:00 am

தினமணி செய்திச் சேவை

மனாமா: வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்திவரும் ஈரானுக்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது.

இந்நிலையில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. பஹ்ரைன் வெளியுறவு அமைச்சா் அப்துல் லத்தீப் பின் ரஷீத் அல் ஸயானி தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவூதி அரேபியா, கத்தாா், குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் கடந்த பிப். 28-ஆம் தேதிமுதல் நடத்திவரும் தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கவும், தங்கள் இறையாண்மையைக் காக்கும் உரிமை ஜிசிசி நாடுகளுக்கு உள்ளது; தங்கள் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, குடிமக்களைப் பாதுகாக்க பதில் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு ஜிசிசி நாடுகளின் தளங்கள் பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும், ஜிசிசி நாடுகளின் சிவில் மற்றும் குடியிருப்புகளைக் குறிவைத்து ஈரான் தொடா்ந்து ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தாக்குதலை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.