

தெற்கு காஸாவின் ராஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் கடந்த சனிக்கிழமை இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 போ் உயிரிழந்தனா். அவா்களில் 18 போ் குழந்தைகள்.
இந்த நிலையில் ராஃபா நகரில் வசித்து வரும் கர்ப்பிணியான சாப்ரி அல்-சகானி என்ற பெண்மணியின் வீடு, இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் தரைமட்டமாகியுள்ளது. இந்த தாக்குதலில், அந்த வீட்டில் வசித்து வந்த அவருடைய கணவரும், 3 வயது மகளும் பலியாகினர்.
இந்த நிலையில், தலையில் பலத்த காயமடைந்த சாப்ரி அல்-சகானி உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஃபா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை காப்பாற்றுவது இயலாத காரியம் என தெரிவித்துவிட்ட நிலையில், அவருடைய கருப்பையிலிருந்து குழந்தையை காப்பாற்ற முயற்சித்தனர்.
இதையடுத்து, 30 வார கர்ப்பிணியான சாப்ரி அல்-சகானிக்கு அவசரகால அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பெண் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சப்ரின் ஜௌடா என்ப் பெயரிடப்பட்டுள்ள அந்த பெண் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்துள்ளதால், தற்போது இன்குபேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் 3 முதல் 4 வாரங்கள் அந்த குழந்தை மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டுமெனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தந்தையையும் தாயையும் போரில் பறிகொடுத்துள்ள அந்த குழந்தைக்கென தற்போது யாருமில்லாததால், ஆதரவற்ற நிலையில் வளரக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
காஸாவில் நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களில் இதுவரை கொல்லப்பட்டவர்களில் மூன்றில் 2 பங்கினர் குழந்தைகளும் பெண்களும் ஆவர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஸாவில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 34,150ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.