பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், போரை உடனடியாக தடுத்து நிறுத்த பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.

Andres Kudacki

அதேபோல், நாட்டின் பல்வேறு பல்கலைக்கழக வளாகங்களில் பாலஸ்தீனர்களின் விடுதலை கோரி மாணவர்கள் கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் கூடாரம் அமைத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், போரை உடனடியாக நிறுத்த வேண்டும், இனப்படுகொலையை நிறுத்த வேண்டும், இஸ்ரேல் போரின் மூலம் லாபம் ஈட்டும் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை பல்கலைக்கழகம் நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

Stefan Jeremiah

இதற்கிடையே பல்கலைக்கழகத்தில் படிக்கும் யூத மாணவர்கள் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பியதாக தகவல்கள் வெளியான நிலையில், வெள்ளை மாளிகை தரப்பில் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், போராட்டம் நடத்தும் மாணவர்களுடன் இருக்கும் யூத மாணவர்கள் தாங்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குள் முடித்துக் கொள்ளவில்லை என்றால் வேறு வழியில் போராட்டம் நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக தலைவர் மினோச் ஷபிக் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்து அவர்களின் கூடாரத்தை அகற்றியுள்ளனர்.

மேலும், பல்வேறு மாணவர்கள் எச்சரிக்கையை தொடர்ந்து தங்களின் போராட்டத்தை கைவிட்டதாகவும், சில மாணவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் புதன்கிழமை காலை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால், மாணவர்கள் தரப்பில் பல்கலைக்கழகத்துக்கு தொடர்பில்லாதவர்களை வெளியேற்றுவதாக உறுதி அளித்து, போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

மேலும், மாணவர்களின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுக்கு ஆதரவாக பேராசிரியர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அமெரிக்காவில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com