இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராபாவில் ராணுவம் ஊடுருவது உறுதி என செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை இருதரப்பிலும் ஆதாயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில் இஸ்ரேலிய பிரதமரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கனின் இஸ்ரேல் வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நெதன்யாகு இவ்வாறு கூறினார். இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்துவரும் நிலையில் ஆண்டனி பிளிங்கன் அது தொடர்பாக இஸ்ரேல் சென்றடைந்துள்ளார்.
போர் நிறுத்தம் நிறைவேறுகிறதோ இல்லையோ, ஹமாஸ் போராளிகளை வேரோடு அழிக்க இஸ்ரேல் ராணுவம் ராபாவுக்குள் நுழையும் என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் அரசில் பங்குவகிப்பவர்களிடையே கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் ராபாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் தாக்குவதையே வலியுறுத்துகிறார்கள்.
ஒருவேளை போர் நிறுத்த உடன்படிக்கை எட்டபட்டால் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் ஆட்சி பெரும்பான்மைக்கு சவால் விடப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் நெதன்யாகு, “இலக்குகள் நிறைவேறுவதற்கு முன்பாக போர் நிறுத்தம் என்கிற எண்ணம் எங்களுக்கு எழவில்லை. முழுமையான வெற்றியை எட்ட நாங்கள் ராபாவுக்குள் நுழைவோம் மற்றும் ஹமாஸ் படைகள் அழிக்கப்படும். போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் (இது மாறாது)” என தெரிவித்துள்ளார்.
காஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த பெரும்பான்மையான மக்களின் புகலிடமாக ராபா உள்ளது குறிப்பிடத்தக்கது.