

பிரதமர் நரேந்திர மோடியின் நினைவாக போலந்து நாட்டில் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தேநீரகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
போலந்து தலைநகர் வார்ஸா நகரில் ’சாய்வாலா - தி காஸிப் சென்டர்’ என்ற பெயரில் தேநீரகத்தை நடத்தி வருகிறார் குஜராத்தின் ராஜ்கோட்டை பூர்விகமாகக் கொண்ட சேத்தன் நந்தானி.
போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க்கின் அழைப்பை ஏற்று, நாளை(ஆக. 21), நாளை மறுநாள்(ஆக. 22) ஆகிய இருநாள்கள் பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக போலந்து செல்கிறார். இந்த நிலையில், பிரதமரின் வருகையை அங்குள்ள இந்தியர்கள் வரவேற்றுள்ளனர். இதுதொடர்பான காணொலிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள சேத்தன் நந்தானி பேசியதாவது, “நான் கடந்த 14 ஆண்டுகளாக போலந்தில் வசித்து வருகிறேன். இந்த உணவகத்துக்கு ‘சாய்வாலா’ எனப் பெயரிட முக்கிய காரணம், வேறு யாருமல்ல பிரதமர் மோடிதான்.
இங்கு(போலந்தில்) இதுபோன்றதொரு உணவகத்தை நாங்கள்தான் முதன்முதலில் ஆரம்பித்து நடத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு விற்கப்படும் பானி பூரியை போலந்து நாட்டினர் ருசித்து சாப்பிட்டு மகிழ்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவத் தாக்குதல் நடவடிக்கைகள் ஐரோப்பிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பதற்றமான சூழலில், போலந்தைத் தொடர்ந்து, அதன் அண்டை நாடான உக்ரைனுக்கு ஆக.23-ஆம் தேதி பிரதமர் மோடி செல்கிறார். அப்போது உக்ரைன் அதிபருடன் போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் மோடி ஈடுபடுவார் எனத் தெரிகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.