நேபாளத்தில் ஆற்றில் விழுந்த பேருந்தில் இருந்த அனைவரும் இந்தியர்கள்!
நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த இந்திய பயணிகள் பேருந்தில் இருந்த 14 பேர் பலி.


நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தனியார் நிறுவனப் பேருந்து உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூரிலிருந்து சென்றதும், அதில் இருந்த அனைவருமே இந்தியர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
நேபாளத்தின் தனஹுன் மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை முற்பகலில், மர்சையங்டி ஆற்றின் ஓரமாகச் சென்று கொண்டிருந்த இந்திய பயணிகள் பேருந்து, திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து நேபாள நாட்டு காவல்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவிலிருந்து ஆகஸ்ட் 20ஆம் தேதி பெலாஹியா சோதனைச் சாவடி வழியாக நேபாளத்துக்குள் எட்டு நாள் அனுமதியுடன் பேருந்து நுழைந்திருக்கிறது.
தனியார் பேருந்து நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தப் பேருந்தில் 40 பேர் இருந்துள்ளனர். உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தது என்று அறியப்படும் வாகனப் பதிவு எண்ணைக் கொண்டிருக்கும் அந்த பேருந்தில் இருந்த 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஆற்றில் கவிழ்ந்த பேருந்து மட்டும் தலைகீழாக ஆற்றங்கரையோரம் நிற்கிறது, அதில் இருந்தவர்களை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பொக்காராவிலிருந்து காத்மாண்டு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இது குறித்து உத்தரப்பிரதேச மீட்பு ஆணையருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, அந்தப் பேருந்தில் பயணித்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் விவரங்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...