
பாகிஸ்தான் மத்திய வங்கி இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
தற்போதுள்ள ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்புத் தன்மையை அதிகரிக்க ஹாலோகிராம் அம்சங்களை சேர்க்கத் திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் மத்திய வங்கி, ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்புகளையும் மாற்றி பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை இந்தாண்டு இறுதியில் அறிமுகப்படுத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்படும் ரூபாய் நோட்டுகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் புழக்கத்திற்கு வருமென வங்கி மற்றும் நிதித்துறை செனேட் குழுவிடம் பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி ஆளுநர் ஜமீல் அகமது தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய ரூபாய் நோட்டுகள் ரூ.10, 50, 100, 500, 1000 மற்றும் 5000 மதிப்புகளில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
பழைய ரூபாய் நோட்டுகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு புழக்கத்தில் இருக்குமென்றும், படிப்படியாக அவை மத்திய வங்கியால் நீக்கப்படும் என்றும் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூடுதலாக புதிய பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகள் ஏதெனும் ஒரு மதிப்பில் மட்டும் தற்போது வெளியிடப்படும் என்றும் மக்களிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற மதிப்புகளிலும் அவை வெளியிடப்படும் என்றும் ஆளுநர் கூறினார்.
தற்போது, உலகம் முழுக்க 40 நாடுகள் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி வருகின்றன. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகள் தயாரிப்பது கடினம் மற்றும் அதன் மேம்பட்ட ஹாலோகிராம் பாதுகாப்பு அம்சங்களால் பல நாடுகளில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதன்முதலாக ஆஸ்திரேலிய அரசு 1998 ஆம் ஆண்டில் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.
மோஹ்சின் அசீஸ் உள்ளிட்ட சில செனட் குழு உறுப்பினர்கள் உயர்ந்த மதிப்புள்ள நோட்டுகள் ஊழலை எளிதாக்குகிறது என்ற வாதங்கள் வைத்த போதிலும் ரூ. 5,000 நோட்டினை ரத்து செய்ய எந்தத் திட்டமும் இல்லை என்று கவர்னர் அகமது உறுதியாகக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.